உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின் துணை
கொண்டு எழுதிய கவிதை இது
தயவு செய்து வாசித்துவிடாதே
உன் கண்ணீரை ஏந்தினால் என்
கவிதை இறந்துவிடும்
காலங்கள் கரைந்தாலும் கரை
சேராத நதியாய் தேங்கியபடியே
கிடக்கிறது என் காதல் உன்னால்
காதல் எனும் வானத்தில் நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்
என் காதல் உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும்
காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது
உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை
நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்
அழுகுரல்தான்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்தபோது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று
நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை
காதலால்தான் வாங்கிக் கொண்டேன் என்பதை
அனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக் கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை
என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்
உன் இதயத்தில் தொடர்ந்து வாழ
வாய்ப்பில்லாமல் போனதைவிட
உன் இதயத்தில் நான் இறக்காமல்
போனதில் கவலைதான் எனக்கு
உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும்தான் பாவம் அது நான்
அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்
யார் அழுதாலும் உன்னால் குறையப் போவது
எங்கள் ஆயுள்தானே
பாவப்பட்டவனின் கைக்கு விலைபோன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்
இன்று என்னைவிட என் பேனா அதிகமாக
அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்
உறவை அழவிட்டு விட்டு என்ன செய்யப்
போகிறேன் எனவே உனக்கு சொல்ல
வந்ததை சொல்லிவிடுகிறேன்
இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்
முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்
வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து
அள்ளலாம்
-யாழ்_அகத்தியன்
No comments:
Post a Comment